உறக்கம்
முருங்கைக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தவள் கையைச்
சட்டென்று பற்றி இழுத்து வந்தன அவ்வார்த்தைகள்.
கடும் பசியில் இருப்பதாய்ச் சொல்லின.
வேடிக்கை, விளையாட்டு, மழலை பேசச்சொல்லி,
ஆதி அந்த தத்துவங்களைக்கேட்டு,
உண்மையையும் இன்மையையும் ,
அழகையும் அல்லாதவைகளையும் பாடச்சொல்லி,
காதல், கவிதைகளை யாசித்து,
பரிவு, இரக்கம் எதிர்நோக்கி
முகத்தையே பார்த்திருந்தவைகளுக்கு,
கொஞ்சம் தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.
ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிடும் வேளையில்
தள்ளிவிட்டு சிரிக்கும்,
இருபுறமும் கூர்கொண்ட ஆயுதமாய் கொண்டவள்
கைகிழிக்கும்
சாத்தியங்களை அறிந்திருப்பதாய்ச்சொன்னாள் எங்கோபார்த்தபடி.
பசி இன்னும் கூடியதாய் கூச்சலிட்டு,
பேச விடாமல் சமைக்கத் தள்ளின.
மூடிய கலன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது,
உப்பு, காரம் முதலியவை. தேடித்திறந்து
வகைக்கொன்றாய் கூட்டிக்குறைத்து சமைக்கவேண்டும்.
பொழுதுசென்றுகொண்டிருக்கிறது. உணவு இன்னும் தயாராகவில்லை.
மிதமாகத் தொடரும் தீயில் பக்குவப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வார்த்தைகள் களைத்து உறங்கிக்கொண்டிருக்கின்றன.
வடிந்த கண்ணீர்த் தடங்களை அவள் எட்டிப்பார்க்கவில்லை.
Labels: Kavithaigal

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home