Saturday, 13 December 2014

இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறாங்க...



Read more »

Monday, 20 October 2014

என்னை நெய்த நூல்கள்

முன்குறிப்பு: இதை ஏன் எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை. இது பிறருக்கு உதவியாகவோ சுவாரஸியமாகவோ இருக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் இதை சொல்லியே ஆகணும்னு தோணுமே... அந்த வகை. கொஞ்சமாய் கை வந்தது. 

    * அது ரீகல் சோப் என்றுதான் ஞாபகம். அம்மாவுடன் கைபிடித்து நடந்து செல்லும் சிறுவன் மீது மழைச் சேறு பட்டு கறையாகிவிடும் உடை, சரி செய்து தரும் அம்மா. கார்ட்டூனாக வந்த அந்த விளம்பரம் திரும்ப திரும்ப பலமுறை... இந்த கதை சொல்லு என்று பெரியவர்களை படுத்தி... படிக்கவைத்து பலமுறை பார்த்த முதல் ஆரம்பம். அது பெரியவர்கள் படிக்கும் அமுத சுரபி புத்தகம்.

   * அப்போதுதான் முதல்முறை அந்த செய்தித்தாளோடு இலவச இணைப்பாக ஒரு சிறுவர் புத்தகம் வாரந்தோறும் வர ஆரம்பித்தது. நன்றாக நினைவிலிருக்கிறது முதல் கதை வினாயகர். பொம்மைப்படம். நானும் அண்ணாவும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவோம். எப்போதும் அவனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். அவன் வேகமா படித்துவிட்டு தருவான் விடும்மா என்பார்கள். பொறுப்பாக தொடர் படிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.

   * ராணி காமிக்ஸ் என்று பெரும்பாலும் ஜேம்ஸ் பாண்ட் கதை வரும் ஒரு புத்தகம்.  ஜேம்ஸ் பாண்டால் முடியாதது எதுவும் இல்லை என்றும் , சைனா... உலோக கை கொண்ட டாக்டர் நோ போன்ற மிக மிக கொடியவர்கள் நிறைந்த தேசம் என்றும் நம்ப வைத்தது.

   * ஒரு புத்தகத்தை முதன்முதலில் காதலிக்கத்துவங்கினேனென்றால் அது பூந்தளிர். அது விற்கும் கடை அண்ணாவிற்குதான் தெரியும். அவந்தான் வாங்குவான். முட்ட முட்ட படித்துவிட்டு எனக்குத் தருவான். முதலில் அட்டைப் படத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருப்பேன், லேசாக தடவிப் பார்ப்பேன். பின் எடுத்தவுடனே படித்து தீர்த்துவிட மாட்டேன். குறைந்த பிடித்தம் உள்ளவற்றிலிருந்து அதிகம் பிடித்தவற்றிற்கு அன்வர், காக்கை காளி, கபீஷ் என்று போகும்.  
தூப்தூப், சமந்தகா, பந்திலா என்று அனிமல் கேரக்டர்கள். (இப்போது அந்த புத்தகம் வருவதில்லை. L )

  * கோகுலம் : படக்கதை தவிர அவ்வளவாக எதுவும் ஈர்த்ததில்லை.

  * கனத்த அட்டை வழவழ பக்கங்கள் என்று.. அப்பா ஒரு புத்தகத்தை கையில் கொடுத்தார். ரஷய மொழி மாற்று புத்தகம். கரடிக் குடித்தனம் என்று பெயர். பெரிய படங்கள் கொஞ்சமாய் எழுத்து. நீண்ட பொன் வண்ண தலைமுடியை பின்னி ரிப்பன் கட்டி, முழு frock அணிந்திருக்கும் ஈ ஙொய்மொய் , கொசு ரீங்காரீ, தவளை க்ராக் க்ராக், முயல் கோணல் காலன், நரி பேச்சழகி என்று எல்லாம் ஒரு மண்பானைக்குள் வசிக்க முயற்சி செய்து, கடைசியில் ஒரு கரடி அந்த பானையை போட்டு உடைத்துவிடும்.
அந்த புத்தகத்தைக் காணோம் L

   * ஆர்ச்சி காமிக்ஸ், ஒரு ரோபோ இரண்டு நண்பர்கள் சாகசம் செய்யும் கதைகள். இரும்புக்கை மாயாவியும் அதில் வரும்.  ஒரு தீபாவளி மலர்... அவ்வளவு பெரிய குண்டு புக், பிறந்தவுடன் கைத்துப்பாக்கியைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திவிட்டு சிரித்து விளையாடும் பிறவி வில்லன் பில்லி, அவனை அடக்கி அழவிடும் cow boy hero.. லக்கி லூக். இதை ஒரு நூறு முறையாவது படித்திருப்பேன். ஒரு கேரமெல் சாக்லேட் தூக்கிப்போட்டு கீழே விழும் முன் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு பெருமை பேசும் பில்லி, அது கீழே விழுவதற்குள் மடித்த காகிதத்தை சுட்டு அதில் மனித முகத்தை வரவைக்கும் லூக்.. லக்கி லூக். எத்தனை தமிழ் சினிமா தத்தெடுத்துக் கொண்டிருக்கும் இக்காட்சியை!

இதை யாருக்கோ படிக்கக் கொடுத்து திரும்ப வரவேயில்லை. இன்னமும் அம்மாவிடம் சண்டை போட்டபடி நான்...

சரியாக ஐந்தாவது படிக்கும்போது உனக்கு புக் படிக்க பிடிக்குமா.. என்று பக்கத்துவீட்டு அண்ணா அழைத்துப்போய் லைப்ரரியில் சேர்த்து விட்டார்கள். அவ்வளவு புத்தகமும்.. புத்தக வாசனையும் சேர்ந்து ஒரு பொக்கிஷம் கிடைத்த்துபோல் மூச்சு முட்டியது. அங்கே தெனாலிராமன் மந்திரவாதி கதைகள் என்று ஓடியது. சில புத்தகங்கள் வீட்டுக்கு தர மாட்டார்கள். டேபிள் உயரம் எட்டாமல் மடியில் வைத்து படித்திருக்கிறேன்.

இவை நடுவே பள்ளிப் புத்தகங்கள் படித்ததாகவே நினைவில்லை. ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் பின்னட்டையில் இருந்த முள்ளு பூவும் அதன் மேல் அமர்ந்திருந்த குருவியும் மட்டும் ஞாபகம் இருக்கிறது. அதோ ஓர் அத்திப்பழம்... என்று உள்ளே இருந்த சிவப்பு பழமும். மற்றபடி அவங்க ரெண்டு பேரும்தான் சண்டை போட்டாங்களே இப்போ ஏன் ஒண்ணா பாட்டு பாடுறாங்க ? என்று ஜெமினி சாவித்ரியைப்பற்றி வீட்டில் கேள்வி கேட்கும் அளவிற்கு வில்லேஜ் விஞ்ஞானியாகவே வளர்ந்தேன்.

அவ்வப்போது விடுமுறைக்கு ஊரிலிருந்து வரும் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்களை வைத்துக்கொண்டு அண்ணா கதை சொல்லிக் கொண்டிருப்பான். நான் கடைசியாக உட்கார மாட்டேன்.. பின்னால் திரும்பி பார்க்கவும் மாட்டேன். அவ்வளவும் பேய்க்கதைகள் மற்ற்ம் ராஜேஷ் குமார் கதைகள். 

பின்பு ராஜேஷ் குமார், PKP, பாலகுமாரன், சுஜாதா என்று தொடங்கித் தொடர்ந்தேன்.  தி. ஜா. கல்கி, க.நா.சு என்று அவ்வளவு பேரும் அம்மாவால் அறிமுகம். இடையில் அம்மா சொல்லும் எடிசன், க்யூரி, ஐன்ஸ்டைன், பால் வீதி, ஒளிவருஷ  விஷயங்கள்  அறிவியல் கதைகளில் ஒன்றிப்போக வைத்தன. அறிவியல், இவ்வளவையும் தாண்டி கணக்குகளால் ஆனது என்று பின்னாளில் புரிந்தது.

புத்தகங்களைப் போலவே வாரப்பத்திரிகைகளும் பெருமளவில் influence செய்தன. விகடனைவிட குமுதம் பிடிக்கும். முதலில் படிக்க வேண்டுமென்று ஒளித்துவைத்துவிடுவேன். சுஜாதா தயாரித்த குமுதம் இதழில் வாசனை ஸ்ப்ரே செய்யப்பட்ட ரோஜா படம்.. வெகுகாலம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது. பிடித்த கதைகளை கட் பண்ணி வைத்துக் கொள்வேன். (இப்போதெல்லாம் குமுதம் விகடன் படிக்கவே தோன்றுவது இல்லை. ) கல்லூரிக் காலத்தில் public library தவிர இன்னொரு lending library க்கும் செல்லும் வழக்கமுண்டு. (பின்னாளில் அந்த லைப்ரரியின் மாடியே என் புகுந்த வீடானது... தனிக்கதை.)

குறிப்பிட்டே ஆகவேண்டிய இன்னொரு புத்தகம்... குழந்தைகளும் குட்டிகளும். ரஷ்ய மலையோர கிராமம், வீடு முழுக்க குதூகலமான சிறுவர்கள், அவ்வப்போது வீட்டிற்கு வரும் புதுப்புது வளர்ப்புப் பிராணிகள் என.. அந்த வீட்டு சிறுமியாகவே என்னை உணர வைக்கும் ஒரு புத்தகம். வழக்கம்போல் அம்மா ஒருவருக்கு கொடுத்து நடுவில் பல பக்கங்களை இழந்து வந்திருக்கிறது. இப்பவும் யாரையும் அவ்வளவாக தொட விட மாட்டேன். இன்னொரு பிரதிக்கு முயன்று கொண்டிருக்கிறேன்.

புத்தகத்தின் சுவாரஸியத்தைப் பொறுத்து.. இரவு ஒரு மணி இரண்டு மணி வரை நீளும் வாசிப்பு..(சில சமயம் சிரித்தபடி சில சமயம் கண்ணீர் வழிய..) மறு நாள்.. கல்லூரிக்கு மிகத் தாமதமாக் போய் நிற்பதில் முடியும். காம்ப்பவுண்ட் ஏறி குதித்தால் கல்லூரி என்றாலும் நேர்வழியில் சுற்றிக்கொண்டு போய்தான் வழக்கம். அட்டெண்டன்ஸ் எடுத்துக்கொண்டிருப்பார்கள்... உன்வீடு ரொம்ப தூரம்னு லேட்டா வரியா என்று அதிக பட்ச திட்டை வாங்கிக்கொண்டு முதல் வரிசை முதல் இடத்தில் சென்று அமர்வேன். அங்கு உட்கார யாருக்கும் துணிவிருக்காது. முதல் வரிசை என்பதால் யாரும் படிப்பாளி என்று எண்ணிவிட வேண்டாமென மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருடனும் நன்றாக பழகினாலும்.. சட்டென்று ஒரு விலகல் வந்துவிடும். கதை மாந்தருடனோ கதாசிரியருடனோ கற்பனையில் தனியே பேசும் வழக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. பல பெரிய பிரச்சனைகளில் இருந்து வெளியே வர புத்தகங்கள் உதவினாலும், பொதுவாக இருக்கவேண்டிய ஒரு alertness இல்லாமல் போய்விட்டதோ என்று தோன்றுகிறது.

எனினும் தொலைந்து போன சில புத்தகங்களை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

Friday, 5 September 2014

மாசறு பொன்னே...

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே

மொத்த வகுப்பும் அமைதியாய் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வரியையும் ரசனையோடு விவரித்துக் கொண்டிருந்தார் இயற்பியல் ஆசிரியர். ஆம்! இயற்பியல் ஆசிரியர்தான். தமிழிற்கு பலகாலமாக ஆசிரியர் நியமிக்காததால் அவராகவே தமிழையும் எடுக்க ஆரம்பித்திருந்தார். அப்படித்தான் அவர். மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். (அது ஒரு பெண்கள் பள்ளி). முகத்தில் புன்னகை அணியாமல் பேசி பார்த்ததே இல்லை.

இரயில், பேருந்து பயணங்களிலோ அல்லது நேரிலோ அடர்த்தியாக நடப்பட்ட நாற்றுகளை பார்த்திருப்பீர்கள். காற்று வீசும்போது அவைகளில் ஒரு அதிர்வு பரவிக்கொண்டே போகும். பலருக்கு கவிதைகள் தோன்றக்கூடும் அதைப் பார்த்து...
ஒலி அலை பரவும் முறைதான் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும். குளிக்க தாமதம் செய்துகொண்டு வளவிய வென்னீர் ஆறும்போதெல்லாம், ஒரு பொருள் வெப்பமிழக்கும் வீதம் சுற்றுப்புறத்தோடு... என்று மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். கவனித்தால் புரியாமல் இருக்கவே முடியாது என்பதுபோல் பாடமெடுப்பார். எல்லாமே மிக மிகப் பொருத்தமான உதாரணங்கள். எல்லா மாணவிகளுக்குமே அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு. என்னைப்பொருத்தவரை எனக்குக் கொஞ்சம் கூடவே... சிலர் பேசும் வார்த்தைகள் மட்டும் ஒரு வரி விடாமல் கிரஹித்துக்கொள்ளத் தோன்றும். அந்தப் பட்டியலில் அவருக்கு முதலிடம்.

ஒரு நாள் நட்பு பற்றி ஏதோ ரொம்ப நேரமாக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். வழக்கம்போல் வகுப்பில் முழு அமைதி. முதல் வரிசையில் இருந்து லேசாக விசும்பல் சத்தம். ஒரு மாணவி கண்ணீர் வழிய வழிய துடைத்துக் கொண்டே அழுது கொண்டிருந்தாள். சார் சார்.. இவ அழறா சார்.. என்று ஒரு துரோகக் குரல். அவர் அதிர்ச்சியாகி என்னாச்சும்மா.. அழறபடி நான் என்ன பேசினேன் என்றார். எல்லாரும் பார்த்துவிட்டதால் அவள் முகத்தை மூடிக்கொண்டு நன்றாக அழ ஆரம்பித்துவிட்டாள். அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. மற்ற மாணவிகளே சொன்னார்கள்.. சார் அவளும் சங்கீதாவும் ரொம்ப close friends சார். இப்ப கொஞ்ச நாளா ரெண்டுபேரும் பேசாம் இருக்காங்க. அதான் இவ அழறா என்றார்கள். அப்போது எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார். அந்த அழுமூஞ்சி மாணவி நான்தான். (காரணம் பிரிதொரு சமயம்...) பின்பு சில நாட்கள் கழித்து அவர்களை சமாதானப் படுத்தி பேச வைத்தார். அப்போதிலிருந்து மரியாதை கூடி என் ரோல் மாடலாகவே ஆகிவிட்டார்.

பள்ளி, கல்லூரிக்குப் பின் இன்று ஒரு உ.பேராசிரியராக நான். சில மாதங்களுக்கு முன் ஒரு திருமணத்தில் சாரை பார்த்துவிட்டு ஓடிப்போய் பக்கத்தில் நின்றேன். அருகில் சென்றதும், மறந்திருப்பாரோ என்ற பயத்துடன்.. சார்.. நான் உங்க student.. என்று இழுத்து ஆரம்பித்தேன்... ஓ! தெரியுமே!! இப்ப கொஞ்ச நாள் முன்னாடி கூட நீயா நானா program ல் வந்தியா? இதெல்லாம் பேசினியா என்று நான் பேசியதை சொல்லி என்னை திகைக்க வைத்தார். ம்ம்.. அப்புறம் உன் friend எப்படி இருக்கா? என்றார். நல்லாருக்கா சார். வெளிநாட்டில் இருக்கிறாள். இருந்தும் என் ஒரே friend அவள் அவளின் ஒரே friend நான். அப்படியேதான் சார் இருக்கோம். இருப்போம். என்றேன். சிரித்தார்.  நன்றியை வார்த்தையில் சொன்னேனா என்று  நினைவில்லை.

மறுநாள் கல்லூரியில் என் மாணவிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நான் நேத்து யார பாத்தேன் தெரியுமா? எங்க Physics sir… இவ்ளோ வருஷத்துக்கப்புறம் என்ன ஞாபகம் வச்சிருக்கார்  உடன் ஒரு மாணவி, நானும் பல வருஷம் கழிச்சி யார்கிட்டயாவது சொல்லிகிட்டிருப்பேன்... நான் எங்க Dhana  Mam ஐ பார்த்தேனே... என்று.

இந்த Effect க்கு என்ன பெயர் என்று தெரியவில்லை... Physics Sir ஐத்தான் கேட்க வேண்டும்.


Sunday, 19 January 2014

தொலையும் கைப்பைகளும் தொலையாத நம்பிக்கையும்.



பாகம் - I
    அன்று காலை ஒர் 11.00 மணி இருக்கும். சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரே ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். அங்கிருந்து நான்காவது நிறுத்தத்தில் இறங்கவேண்டியிருந்தது. 5 நிமிட காத்திருத்தலுக்குப்பின் பஸ் வந்தது. கூட்டம் குறைவாகவே இருந்தது. சன்னலோர இருக்கை எந்த போட்டியுமின்றியே கிடைத்தது. பக்கத்து இருக்கையும் காலியாகவே இருந்தது. ஹேண்ட்பேகை பக்கத்தில் வைத்துவிட்டு, கையில் Carry bag ஐ மட்டும் வைத்துக்கொண்டு, வழக்கம்போல் ஜன்னல்வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். சற்று நேரத்தில் நிறுத்தம் வந்தவுடன் இறங்கி நான்கு அடிகள் நடப்பதற்குள் உணர்ந்தேன் கையில் carry bag மட்டுமே இருக்கிறது. Hand bag ஐ பஸ்சிலேயே விட்டிருக்கிறேன். என்ன செய்வதென்று புரியவில்லை. சட்டென்று அங்கே ஒரு ஆட்டோ வரவும் அந்த பஸ்ஸில் பேகை விட்டுட்டேன். அது பின்னாடியே போங்களேன் என்றேன். இந்த பேகிலும் கொஞ்சம் பணம் இருந்தது.

   சற்றுநேரம் பின்தொடர்ந்தாலும், தொடர்ந்து பஸ்ஸின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. பஸ் நம்பர் என்னம்மா என்றார். 15G என்றால் கோயம்பேடு போகும் இல்லன்னா நேரா பூந்தமல்லி போகும்மா என்றார். எனக்கென்ன தெரியும் பஸ் நம்பர்! நான் இறங்க வேண்டிய இடத்தில் எல்லா பஸ்ஸும் நிற்கும் என்பதால் நான் அதை சரியாக கவனித்திருக்கவில்லை. எனக்கு தெரியலீங்களே என்றேன். அப்போ இனி போறது வேஸ்டுமா என்றார். கொஞ்சம் லேசான வருத்தத்தோடே வீடு திரும்பினேன்.

  இது நடந்து மூன்று நாட்கள் கழித்து, யாரோ என் பெயர் சொல்லி வீட்டுவாசலில் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். எழுந்து வெளியே சென்று பார்த்தால், அவர் கையில் என் பை. முகம் மொத்தமுமே சிரிப்போடு, என்ன என்று கேட்பதற்குள் அவரே சொன்னார். நான் கோயம்பேடு டிப்போ பஸ் ட்ரைவர்ங்க. உங்க ஊர்காரங்க பேக் விட்டுட்டு போய்ட்டாங்க என்று நண்பர் கொடுத்தார். அதான் கொண்டுவந்தேன். என்றார். கிட்டத்தட்ட ஒரு தெய்வமாகவே தெரிந்தார். நிறைய நன்றிகளையும், விடையையும் கொடுத்து அனுப்பினேன். ID card வைத்து அட்ரஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் கூடுதல் சந்தோஷம் என்னவென்றால், கொண்டுபோன மதியஉணவு காலி செய்யப்பட்டு, சுத்தமாக கழுவிவைக்கப்பட்டிருந்தது!

பாகம் II

    அந்த நிகழ்ச்சி நடந்து மூன்று மாதங்கள் இருக்கும். இம்முறை குடும்பத்தில் அனைவரும் திருப்பதி சென்றிருந்தோம். வழக்கம்போல் பலமணி நேர காத்திருப்புகளுக்குப்பின் பாலாஜி தரிசனம். எப்போதும் அந்த தருணத்தில் துளிர்விடும் கண்ணீரை மறைக்க லேசாக ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். பின் வெளிப்ரகாரத்தில் வந்து அனைவரும் அமர்ந்திருந்தோம்.

அந்த நேரத்துக் கூட்டத்தையும் குளிரையும் கொஞ்சநேரம் அனுபவித்துவிட்டு, எழுந்து வெளியே நடக்கத்தொடங்கினேன். எல்லாருமே வந்துவிட்டார்கள். ஏதோ ஒன்று குறைகிறதே என்று யோசித்தேன், மறுபடி கையில் பை இல்லை. அடச்சே! என்ன இப்படி இருக்கிறேனே என்று என்னையே நொந்துகொண்டு, செக்யூரிட்டியிடம் சென்று, என் bag உள்ளே இருக்கு, போகணுங்க என்று கேட்டேன். இல்லமா இந்த வழியா என்ட்ரி கிடையாது என்று மறுத்துவிட்டார். செய்வதறியாமல் முழித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஐந்து நிமிடம் கடந்திருக்கும். ஒரு பெண் என்னை நெருங்கி வந்தார்கள். இது உங்க Bag –ஆங்க? நீங்க உள்ள விட்டுட்டீங்களா? தனியா கிடந்தது. இங்கதான் இருப்பீங்கன்னு எடுத்துட்டு வந்தோம் என்றார்கள். அதே பேக்! அதே IDcard ! அப்போதைய ரியாக்ஷனையெல்லாம் விவரிக்கமுடியாது. ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணம் அது.

பாகம் III

    இப்போது சொல்வது மிகச் சமீபத்து நிகழ்வு. மாலை பணியிலிருந்து வீடு திரும்பும்போது, கையில் இரண்டு மூன்று பொருட்கள். ரயில் நிலையத்து சிமென்ட் பென்ச்சில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். ரயில் வந்தது, இரண்டு நிறுத்தம் தாண்டி இறங்கவேண்டிய இடமும் வந்தது. எல்லாம் பொருட்களும் இருக்கா என்று பார்த்தால், ஒரு பேகை காணோம். OMG! கொஞ்சம்கூட யோசிக்காமல், நான் ஏறிய ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய சாத்தியம் உள்ள ஒரு நண்பருக்கு போன் செய்தேன். எதிர்பார்த்தபடியே இருந்தார். ஆனால் எதிர்த்திசை! எதிர் platform! அதைவிட கொடுமை அவர் ட்ரெயினும் வந்து அப்போதுதான் ஏறி அமர்ந்திருக்கிறார். என் பேக் அங்கேயே இருப்பதாகச் சொன்னார். ஆனால் நிச்சயம் போய் எடுக்கவும் முடியாது. அந்த ட்ரெயினும் நகர ஆரம்பிக்கிறது. அதற்குள் அவர் சத்தமாக யார் பேரையோ சொல்லி அழைத்து, சார், அந்த பேக் மேடமோடது எடுத்துக்கோங்க. என்றார். அவர் சொன்ன நபர் என் ஊர்க்காரர்.

  பிறகென்ன மறுபடி பேக் வீடு வந்து சேர்ந்தது. இந்த நிகழ்வில் ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அழகாக செதுக்கப்பட்டது. எது மாறியிருந்தாலும் பை கைக்கு வந்திருக்காது. பேக் கிடைத்ததைவிட இந்த நிகழ்வில் பொங்கிவழியும் ஆச்சர்யம் அதிக மகிழ்ச்சி. இதை யாரேனும் சொல்லியிருந்தால் நானேகூட நம்பியிருப்பேனா தெரியவில்லை.


இப்படி பொருப்பில்லாமல் இருக்கியே என்று சிலர் திட்டக்கூடும். ஆனால் என்னுடையவை எதுவும் என்னைவிட்டு தொலைந்துபோகாது என்ற நம்பிக்கையை என்னுள் ஆழமாக விதைத்த நிகழ்வுகள் இவை. அதைப்போலவே, மனதில் உருவாகும் சில எண்ணங்களும் விருப்பங்களும், அடுத்த சில நிமிடங்களிலேயே எந்த முயற்சியுமின்றியே சாத்தியமாகும் அதிசயங்களும் என் வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இவ்வளவையும்மீறி, ஏதாவதொன்றை நான் தொலைத்திருந்தால் அது என்னுடையதில்லை!

ஆட்டோவில் விட்டுவிட்டு வரும் குடைகளை ஆட்டோகாரர் பயன்படுத்த மாட்டாரா என்ன!

Monday, 30 December 2013

மூட் மந்திரம்


கொஞ்சம் அழவேண்டியிருந்தது.
மௌனமாய் கண்ணீர் வடிக்கும் வகையிலில்லை.

ஹாலில் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாய்
பதவியேற்றுக்கொண்டிருந்தார்.

ஒரே சாக்லேட் காகிதத்திற்காய் போர் மூளும் சாத்தியம்
இன்னொரு மூலையில்.

இப்படித்தான் பாகு எடுக்கணும் பாத்துக்கோ
பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

“Aunty one hug!” ஓடி வந்த மூன்றரை,
வழக்கத்தை அனுசரித்தது, கையைவிரித்து.

அள்ளி உச்சி முகர்கையில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்!

Labels:

Friday, 27 December 2013

உறக்கம்



முருங்கைக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தவள் கையைச்
சட்டென்று பற்றி இழுத்து வந்தன அவ்வார்த்தைகள்.
கடும் பசியில் இருப்பதாய்ச் சொல்லின.
வேடிக்கை, விளையாட்டு, மழலை பேசச்சொல்லி,
ஆதி அந்த தத்துவங்களைக்கேட்டு,
உண்மையையும் இன்மையையும் ,
அழகையும் அல்லாதவைகளையும் பாடச்சொல்லி,
காதல், கவிதைகளை யாசித்து,
பரிவு, இரக்கம் எதிர்நோக்கி
முகத்தையே பார்த்திருந்தவைகளுக்கு,
கொஞ்சம் தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.

ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிடும் வேளையில்
தள்ளிவிட்டு சிரிக்கும்,
இருபுறமும் கூர்கொண்ட ஆயுதமாய் கொண்டவள்
கைகிழிக்கும்
சாத்தியங்களை அறிந்திருப்பதாய்ச்சொன்னாள் எங்கோபார்த்தபடி.

பசி இன்னும் கூடியதாய் கூச்சலிட்டு,
பேச விடாமல் சமைக்கத் தள்ளின.

மூடிய கலன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது,
உப்பு, காரம் முதலியவை. தேடித்திறந்து
வகைக்கொன்றாய் கூட்டிக்குறைத்து சமைக்கவேண்டும்.

பொழுதுசென்றுகொண்டிருக்கிறது. உணவு இன்னும் தயாராகவில்லை.
மிதமாகத் தொடரும் தீயில் பக்குவப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வார்த்தைகள் களைத்து உறங்கிக்கொண்டிருக்கின்றன.
வடிந்த கண்ணீர்த் தடங்களை அவள் எட்டிப்பார்க்கவில்லை.

Labels:

Tuesday, 24 December 2013

விதிக்கப்பட்டவை...

            
                                
அந்த அறையில் எரிந்து கொண்டிருக்கும்
தீபத்திற்கு ஒப்பானது உண்மையின் வசீகரம்.
ஒற்றையாய் காரிருள் வென்றும் சலனமற்று,
இருத்தலை அமைதியாய் உணர்த்திக்கொண்டு.

அடுத்த நெருங்கிய சுற்றில்,
அதிர்ந்தெழுந்த உடலால்,
உணர்ந்தேதான் இருந்தது விட்டில்,
விதிக்கப்பட்டது விளைய இருப்பதை.

உணவிருந்தும் பசியை நீட்டிக்கும் போதை!
இன்னும் கொஞ்சம் சிறகடித்து சுழன்றது.
தொடர்ந்து எரிந்து கொண்டுதான் இருந்தது,
தீபம் மட்டும்.

Labels: